தமிழ் சினிமாவில் பொன் விலங்கு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அந்த படத்திலேயே அவரின் நடிப்புக் கவனம் பெற்று பாராட்டப்பட்டது. அதனால் அடுத்தடுத்து வில்லன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தன. இதனால் கவனிக்கப்படும் நடிகராக அவர் மாறினார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் வெற்றி பெறாததால் அவருக்கு சினிமாவில் ஒரு பெரிய இடைவெளி விழுந்தது. அதன் பின்னர் அவர் அரசியலுக்கு சென்றார். அங்கும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதன் பின்னர் சமீபத்தில் அவர் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

actor Ranjith
அந்த படம் பட்டியலின மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பட ப்ரமோஷன்களில் அவர் ஆணவக் கொலை செய்வது தப்பில்லை என்றெல்லாம் பேசி சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் கவுண்டம் பாளையம் படம் மேக்கிங்கில் கூட உருப்படியாக இல்லை. தொலைக்காட்சி சீரியலின் தரத்தில் கூட இல்லை. படத்தில் பல காட்சிகள் ஆபாசமாக உருவாக்கப்பட்டு ட்ரோல் ஆகின.
இந்நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக வந்துள்ளார். அவரை வரவேற்றுப் பேசிய விஜய் சேதுபதி, ரஞ்சித் இயக்கி நடித்த பீஷ்மர் என்ற படத்தைப் பாராட்டி பேசினார். அந்த ரஞ்சித்தை தனக்குப் பிடிக்கும் என்றார். விஜய் சேதுபதி பாராட்டும் அளவுக்கு அந்த படத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்.

Ranjith bheeshmar movie
அந்த படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக இருக்கும் ரஞ்சித், அதிகார மட்டத்துக்கு வளைந்து கொடுப்பதில்லை. அதனால் தன்னுடைய வேலையை இழக்கிறார். குற்றவாளியாக புனையப்பட்டு சிறைக்கு செல்கிறார். சிறையில் இருந்து வெளியில் வர, அவருடைய மனைவி தன்னுடைய கிட்னியை விற்கிறார். சிறையில் இருந்து வெளியில் வரும் ரஞ்சித், தன்னுடைய மனைவிக்கு மருந்து வாங்க செல்லும்போது ரௌடிகளோடு ஏற்படும் மோதலால் உரிய நேரத்தில் வரமுடியாமல் போகிறது. இதனால் அவர் இறக்கிறார். அதன் பின்னர் தன்னுடைய எதிரிகள் அனைவரையும் கொன்றுவிட்டு, தன் மகளோடு புதிய வாழக்கையை வாழத்தொடங்குகிறார்.
