CINEMA
“என் இயக்கத்துல நடிக்க ஆசைப்பட்ட விஜய்… ஆனா எனக்கு ஸ்பார்க் கிடைக்கல” – பாரதிராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
பதினாறு வயதினிலெ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து பின்புலத்திலும் அவர் படம் இயக்கி இருந்தாலும் அவருடைய கிராமத்துப் படங்கள்தான் அவரின் முத்திரை.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை தன்னுடைய மண்வாசனை படத்தில் ஹீரோவாக்கியது. ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.
இதனால் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டால் நாம் எப்படியும் நல்ல நடிகராக வந்துவிடுவோம் என பலரும் நம்பினர். அது அப்படியே நடந்தது. அவர் அறிமுகப்படுத்திய பல நடிகைகள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாகினர். ஆனால் தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் விஜய்க்கு மட்டும் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் ஆசை நிறைவேறவில்லை. விஜய் நடிக்க ஆசைப்பட்ட போது பாரதிராஜா இயக்கத்தில்தான் நடிக்கவேண்டும் என நினைத்தாராம்.
இதைப்பற்றி பாரதிராஜாவே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் “விஜய்யின் அப்பாவும் நானும் நாடகம் போடும் போதிருந்தே நண்பர்கள். விஜய் ஹீரோவாக ஆசைப்பட்ட போது முதலில் என்னிடம்தான் அழைத்து வந்து “இவன் உங்கள் இயக்கத்தில்தான் ஒரு கிராமத்து ஹீரோவாக அறிமுகமாகனும்னு சொல்றான்னு” சொன்னாரு. ஆனா எனக்கு அப்ப என்னவோ தோனவே இல்ல. நான் எஸ் ஏ சந்திரசேகரிடம் “நீயே இயக்குனர்தான… அதனால நீயே அவன ஹீரோவாக்கு” என சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். ஒருவேளை இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்திருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத படமாகக் கூட அமைந்திருக்கும்.