வரிசையாக ஐந்து படங்கள் ஹிட் கொடுத்து ஆறாவது படத்தில் சறுக்கிய பாரதிராஜா… நிழல்கள் ப்ளாப்புக்கு காரணம் என்ன?

By vinoth on ஜூன் 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள்.

   

ஆனால் அடுத்தடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’,  ‘சிவப்பு ரோஜாக்கள்’, புதிய வார்ப்புகள் மற்றும் நிறம் மாறாத பூக்கள் என தொடர்ச்சியாக ஐந்து ஹிட்களைக் கொடுத்தார். இதனால் அவரின் புகழ் தமிழ் சினிமா தாண்டியும் பரவியது. ஆனால் அடுத்து அவர் இயக்கிய ஆறாவது படமான நிழல்கள் படுதோல்வி படமாக அமைந்தது.

   

இத்தனைக்கும் அந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அப்போதே சூப்பர் ஹிட் ஆகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனாலும் நிழல்கள் படம் தோல்வி அடைந்ததற்கு அதன் கதையமைப்புதான் காரணம். அந்த படத்தில் மூன்று விதமான இளைஞரகளின் வாழ்க்கையையும், அவர்கள் தங்கள் லட்சியங்களை அடைவதற்கான போராட்டத்தையும் காட்டியிருப்பார்கள்.

 

திறமையிருந்தும் மூன்று பேருமே இறுதியில் தோற்றுப் போவது போல படம் முடியும். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கையின் எதார்த்தத்தை நிழல்கள் படம் சொன்னாலும் கதாநாயகர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை ரசிகர்கள் கைவிட்டார்கள். அப்போது பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்த ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படமும் ரிலீஸாகி தோல்வி அடைந்தது.

இதனால் பாரதிராஜா இனிமேல் அவ்வளவுதான் என்ற பேச்சுகள் எழுந்த போது ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்து கம்பேக் கொடுத்தார் பாரதிராஜா.