பங்களாவிற்குள் நடந்த கொடூரம்… விலையுயர்ந்த நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பெங்களூருவில் நடுங்கவைக்கும் சம்பவம்….!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில், தனது பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளியைத் தொழிலதிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியான சூலிபெலேயைச் சேர்ந்த தீபக் கிருஷ்ணா என்ற பெரும் பணக்காரர், தனது பங்களாவில் வளர்த்து வரும் விலையுயர்ந்த நாய்களைப் பராமரிப்பதற்காகக் கேரளாவைச் சேர்ந்த ஸ்மிதா (47) என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவருடன் கேரளாவைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்கள் அங்கு வீட்டு வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த 3-ம் தேதி தோட்டத்தில் நாய்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த ஸ்மிதாவைத் தீபக் கிருஷ்ணா பங்களாவிற்குள் அழைத்து, பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். தீபக் கிருஷ்ணாவின் தவறான அணுகுமுறைக்கு ஸ்மிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்து அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா, உருட்டுக்கட்டையை எடுத்து ஸ்மிதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற பெண் ஊழியர்களையும், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியைக் காட்டி அவர் மிரட்டியுள்ளார்.

   

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்மிதாவை மீட்ட சக ஊழியர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஸ்மிதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்மிதாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், கேரள மற்றும் கர்நாடக போலீஸார் இணைந்து நடத்திய தீவிர விசாரணையில் தீபக் கிருஷ்ணாவின் கொடூரச் செயல் அம்பலமானது.

   

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக முயன்ற தீபக் கிருஷ்ணாவை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைதான தீபக் கிருஷ்ணா மீது ஏற்கனவே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான வேலை தேடி வந்த பெண்ணிற்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.