மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் உச்சக்கட்டப் பதற்றத்தில் உள்ளது. மொத்தம் 294 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில், ‘பல்டா’ தொகுதி நீங்கலாக 293 தொகுதிகளுக்கு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 148 இடங்களை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்ளி, நாடியா, வர்த்தமான் மற்றும் கொல்கத்தாவின் சில பகுதிகளில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். இந்த மின்தடையைப் பயன்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதிகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்ததாகவும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடுகளுக்குப் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சாடிய மம்தா, தனது கட்சியினருக்கு அவசர அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார். “நானே விடிய விடிய விழித்திருந்து கண்காணிப்பது போல, நீங்களும் உறங்காமல் ஸ்ட்ராங் ரூம்களைக் காவல் காக்க வேண்டும்; சந்தேகம் வந்தால் உடனடியாகப் புகார் அளிப்பதோடு, சிசிடிவி காட்சிகளைக் கேட்டுப் போராடுங்கள்” எனத் தொண்டர்களை அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மம்தா காட்டிய இந்த அதிரடி எதிர்வினை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜி மற்றும் கருத்துக்கணிப்புகளுக்கு இடையே நேரடிப் போர் நிலவுகிறது. மம்தா தனது கட்சி 226 முதல் 230 இடங்கள் வரை பெற்று இமாலய வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறார். ஆனால், முக்கிய எக்சிட் போல் கணிப்புகள் அனைத்தும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. இந்தக் கணிப்புகளால் ஏற்பட்ட அழுத்தமே மம்தாவின் நள்ளிரவுப் பதற்றத்திற்குக் காரணம் என விமர்சகர்கள் கூறினாலும், வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் மட்டுமே மேற்கு வங்கத்தின் அடுத்த ‘திதி’ யார் என்பது உறுதியாகும்.
