சினிமா.. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக இன்று வரையிலும் இருந்துக் கொண்டிருக்கிறது. காலங்களுக்கு ஏற்ப, தொழில்நுட்பங்கள் வளர, வளர சினிமாவில் பல மாறுதல்கள், நடந்துக் கொண்டே வருகிறது. ஆனால் ஒரு இயக்குநரின் கதை, திரைக்கதை நடைக்கு பிள்ளையார் சுளி என்பது அன்றைய காலகட்ட படங்கள் தான். கருப்பு வெள்ளை (BLACK AND WHITE) கால கட்டத்தில் சினிமாவில் ஒரு புரட்சியை, புதிய டிரெண்ட் செட்டரை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 16 வயதினிலே படம் எனலாம். அது நாள் வரை படப்பிடிப்புகள் ஒரு அரங்குள்ளேயே எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முதலாக ஒரு கிராமத்தில் முழுப்படமாக எடுக்கப்பட்ட படம் 16 வயதினிலே.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு பிறகு, பல இயக்குநர்களின் பார்வை கிராமங்களின் பக்கம் விழுந்தது. ஒரு கிராமத்தில் மக்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதை உண்மையாக, எதார்த்தமாக அப்படியே திரைமுன் வெளிக்காட்டியது பாரதிராஜாவின் 16 வயதினிலே. அந்தக் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக இருந்த கமல்ஹாசனை சப்பாணியாக கோவணம் கட்ட வைத்து, எப்போதும் வெற்றிலையை மெல்லும், மூளை வளர்ச்சி குன்றியவனாக ஒரு கால் தாங்கி நடக்கக் கூடியவனாக திரையில் காட்ட என்ன தைரியம் பாரதிராஜாவுக்கு.
1977-ம் ஆண்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, தயாரிப்பாளர் தாமே முன்வந்து இப்படத்தை வெளியிட 175 நாட்கள் திரையில் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கமல் இப்படத்தை கலரில் எடுத்ததன் மூலம் படம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. சூப்பர் ஸ்டாராக இப்போது வலம் வந்து கொண்டிருப்பவரை, அப்படி ஆக்குவதற்கு பாலச்சந்தர் முயன்று கொண்டிருக்க, அவரை பரட்டை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, இது எப்படி இருக்கு என்ற டயலாக்கையும் மக்கள் மனதில் பதிய வைத்திருப்பார் பாரதிராஜா. இப்படத்தின் கிளைமேக்ஸில் பரட்டையை கொலை செய்ததற்காக சப்பாணியை போலீசார் ரயிலில் ஜெயிலுக்கு அழைத்து செல்ல, எப்போது சப்பாணி திரும்ப வந்தாலும், அவருடன் தான் வாழ்வேன் என காத்திருக்கும் மயிலு என முடித்திருப்பார் இயக்குநர்.
இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை நமது யூகத்திற்கே விட்டிருந்தார். பிற்காலத்தில் அவர் எடுத்த இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்தில், மயிலுவும், சப்பாணியும் சேர்ந்து விட்டார்கள் என்பதை ஒரே ஒரு குரல் மூலம் நிரூபித்திருப்பார் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில் படத்தின் ஹீரோ சைக்கிளில் சென்று கொண்டிருக்க, அவ்வழியில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, மைக்கில் மொய் வைத்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
அப்போது பெட்டிக் கடை மயிலு புருஷன் சப்பாணி ஐந்து ரூபாய் மொய் என அறிவிக்கப்படும். அப்படியெனில், ஜெயிலில் இருந்து திரும்பி வந்து மயிலுவுடன் சப்பாணி சேர்ந்து, மயிலுவின் அம்மா நடத்தி வந்த பெட்டிக்கடையை நடத்தி, இருவரும் நல்லப் படியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஒற்றை குரல் மூலம் காட்டியிருந்தார் பாரதிராஜா. இன்று தான் நாம் எல்.சி.யூ (LOKESH CINEMATIC UNIVERSE) எனக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், 1970-களிலேயே அதனை தன் படன் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் இமயம்.