CINEMA
இளையராஜாவின் ஈகோவைத் தூண்டி அவமானப்படுத்திய பாலச்சந்தர்… இருவரின் பிரிவுக்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதே போல பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் பின்னணி இசை, சரணம் ஒன்றுக்கும் சரணம் இரண்டுக்கும் இடையில் வரும் பின்னணி இசை இளையராஜாவின் வருகைக்கு முன்னர் ஒன்றாகவே இருக்கும். ஆனால் இளையராஜாதான் அதை இரண்டையும் வெவ்வேறு இசைக் கோர்வைகளாக்கி ஒரு மாற்றத்தை உண்டாக்கினார்.
இளையராஜா 80 களில் உச்சத்தில் இருந்த போது தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இயக்குனர்களும் அவரோடு ஒரு படமாவது இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இளையராஜா அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான ஆண்டு 1976. அப்போது தமிழ் சினிமாவில் புகழோடு இருந்தவர் பாலச்சந்தர். ஆனால் அவர் 1985 ஆம் ஆண்டுதான் இளையராஜாவோடு சிந்து பைரவி படத்தின் மூலம் இணைகிறார். இந்த படம் இளையராஜாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
இருவரும் இணைந்து அதன் பின்னர் புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி மற்றும் புதுப்புது அர்த்தங்கள் ஆகிய படங்களில் பணியாற்றினர். புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தோடு இந்த வெற்றிக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதற்கு திரையுலகில் பலரும் பலவிதமான காரணங்களை சொல்கின்றனர்.
அதில் ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது படத்தின் ரிலீஸுக்காக அவசரமாக பின்னணி இசை தேவைப்பட போது இளையராஜா பிஸியாக இருந்துள்ளார். அதனால் அவரின் சில ட்ராக் மியூசிக்கை பின்னணி இசையாக பாலச்சந்தர் பயன்படுத்திக் கொண்டாராம். இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் அதன் பிறகு பாலச்சந்தரோடு பணியாற்ற மாட்டேன் என பிடிவாதமாக இருந்துவிட்டாராம்.
அதே போல இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. புதுப்புது அர்த்தங்கள் படத்தின் சில காட்சிகளில் பின்னணியில் பாலச்சந்தர் இயக்கிய மரோசரித்ரா படத்தின் பாடல்கள் அல்லது பின்னணி இசை ஓடுவது போல காட்சிகளை அமைத்துக் கொண்டாராம். மரோசரித்ரா படத்துக்கு இசை எம் எஸ் வி. பின்னணி இசையில் ஜாம்பவான் என பெயர் வாங்கிய இளையராஜா இசையமைத்த ஒரு படத்தில் இன்னொரு இசையமைப்பாளரின் பாடல் ஒலிப்பது அவரின் ஈகோவைத் தூண்டிவிட்டதாம். பாலச்சந்தர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக இளையராஜா நினைத்ததாக சொல்லப்படுகிறது. இதுவும் அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.