தொடர் தோல்விகளை சந்தித்த ஏவி மெய்யப்ப செட்டியார்! வெறுத்துப்போய் ஓடிப்போகாமல் அவர் செய்த தரமான சம்பவம் என்ன தெரியுமா?

By Arun on சித்திரை 18, 2024

Spread the love

தமிழ் சினிமா வரலாற்றில் ஏவிஎம் நிறுவனத்திற்கு மிக அதிகமான பக்கங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகித்த நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார்.

ஏவி மெய்யப்ப செட்டியார் முதலில் ஏவிஎம் ஸ்டுடீயோவை சாந்தோம் பகுதியில்தான் தொடங்கினார். அதன் பின் காரைக்குடிக்கு மாற்றப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தற்போது இருக்கும் வடபழனி பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

   

   

ஏவி மெய்யப்ப செட்டியார் ஏவிஎம் ஸ்டூடியோ தொடங்குவதற்கு முன்பு முதலில் சொந்த ஸ்டூடியோவே இல்லாமல் படம் தயாரித்துக்கொண்டிருந்தார். அப்படி அவர் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் “அல்லி அர்ஜூனா”. அத்திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

 

அதனை தொடர்ந்து “ரத்னாவலி” என்ற திரைப்படத்தை மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். அந்த திரைப்படமும் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து “நந்தகுமார்” என்ற திரைப்படத்தை மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். அத்திரைப்படமும் தோல்வியை தழுவியது. இவ்வாறு தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்திருந்தாலும் மனம் தளராமல் “ஏன் நமது திரைப்படங்கள் தோல்வியை தழுவுகின்றன?” என்று யோசித்தாராம்.

“நமக்கு சொந்தமாக ஸ்டூடியோ இல்லாததுதான் இதற்கு காரணம்” என்று தனக்கு தானே உணர்ந்துகொண்ட மெய்யப்ப செட்டியார், தனது நண்பர்களுடன் இணைந்து மந்தவெலிக்கு அருகில் “பிரகதி ஸ்டூடியோ” என்ற ஸ்டூடியோவை உருவாக்கினார். அந்த ஸ்டூடியோவை தொடங்கிய பிறகு “பூகைலாஷ்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். அத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு அத்திரைப்படம் மிகப் பெரிய லாபத்தை கொடுத்ததாம்.