“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

“கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு எதிராகச் சத்தியமூர்த்தி பவனில் புகார் அளித்தார்கள்” என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ‘கூட்டணி ஆட்சி வேண்டும்’ என்று தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அந்த ஆடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, புதுக்கோட்டையிலும் சிவகங்கையிலும் தான் பேசும் போது, ‘வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்’ என்று முதன்முதலில் கூறியதாகக் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தான் அதைச் சொன்ன உடனே, ‘கூட்டணிக்குக் களங்கம் விளைவிக்கிறார் கார்த்தி சிதம்பரம்’ என்று சத்தியமூர்த்தி பவனில் தனக்கு எதிராகப் புகார் கொடுத்தார்கள் என்றும், தன்னை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரினார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். அவ்வாறு புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்கள் தன்னிடம் இப்போதும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

   

மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது பொதுநலன் சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய குறைகளைத் தான் சுட்டிக்காட்டியபோது கூட, தனக்கு யாரும் ஆதரவாக நிற்கவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் உட்பட நம்முடைய எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் ஒரு வார்த்தை கூட தனக்கு ஆதரவாகப் பேசியது கிடையாது என்று குறிப்பிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், திமுக ஆட்சியின் குறைகளைத் தான் சொன்னபோது எல்லாரும் சட்டமன்றத்தில் அமைதியாகத்தான் இருந்தார்கள் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

   

தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுகையில், புதிய கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இருக்கும் இவர்கள் தான் புதிதாக உருவாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று கார்த்தி சிதம்பரம் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.