உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷுக்கு சுமார் 20 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மோதிசூர் மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதவிருந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி பெரும் விபத்தைத் தவிர்த்தார். பின்னர் பேருந்தை விட்டு கீழே இறங்கிய ஓட்டுநர் மற்றும் சில பயணிகள், காரை ஓட்டி வந்த நபரைத் தடுத்து நிறுத்தித் தட்டிக்கேட்டதால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், திடீரென பேருந்து ஓட்டுநரின் மீது காரை வேகமாக ஏற்றி அவரைக் கொலை செய்ய முயன்றார். இதில் லேசான காயங்களுடன் பேருந்து ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வின் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
