ஹாங்காங்கில் பணிபுரியும் மரியம் ஷேக் என்ற இந்தியப் பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாழ்க்கைக் கதை இணையத்தில் வெளியாகிப் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. 5 வயதில் தன்னைத் தத்தெடுத்த குடும்பத்தாரால் சிறுவயது முதலே கடுமையான வீட்டு வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவரது கருப்பு நிறத்தைக் கேலி செய்தும், அவர் உழைத்துச் சேர்த்த பணம் முழுவதையும் ஏமாற்றிப் பறித்துக்கொண்டும் அவரை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளனர்.
சொந்தமாக வீடும் இன்றி, தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் கணவரின் மருத்துவச் செலவுகளுக்குப் பணம் செலுத்த முடியாமலும் கடுமையான வறுமையில் மரியம் தவித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரும் சோஷியல் மீடியா பிரபலமுமான அபீர் தபாகி, மரியத்தின் துயர நிலையைக் கண்டு உருகியுள்ளார்.
மரியத்திற்குச் சொந்தமாக ஒரு வீடு கட்டித்தர முடிவெடுத்த அபீர், இணையதளத்தில் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே 250-க்கும் மேற்பட்ட நல்நெஞ்சங்கள் இணைந்து சுமார் ரூ.4.7 லட்சம் நிதியைத் திரட்டித் தந்துள்ளனர். ஆதரவற்ற நிலையிலிருந்த இந்தியப் பெண்ணிற்குத் துணையாக நின்ற ஹாங்காங் பிரபலத்தின் இந்த மனிதநேயச் செயலை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
