மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கடைக்குச் சென்ற 9 வயது சிறுமியை, 51 வயதான பிரமோத் ரத்ன கோஷே என்பவர் ரூ.10 நாணயம் கொடுத்து ஆசை காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறிக்கொண்டு தப்ப முயன்றபோது, அவரைக் கொடூரமாகப் பின்தொடர்ந்து சென்று அரிவாளால் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட 20 இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற வழிப்போக்கர் ஒருவரையும் அவர் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நிலையில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த வழிப்போக்கரின் வாக்குமூலமும், புதரில் இருந்து மீட்கப்பட்ட அரிவாளும் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. மேலும், தடயவியல் பரிசோதனையில் சிறுமியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சிறுமி மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ அடங்கிய கலப்பு டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது. ஆபாசக் காணொளிகள் பார்த்த நேரத்தை துல்லியமாக நிரூபிக்க முடியாததால் போக்சோ பிரிவு 12-ல் இருந்து விடுவிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் வலுவாக நிரூபிக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த தஹானு கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஆர். ரஹானே, இக்கொடூர சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாகக் கூறி குற்றவாளி பிரமோத் ரத்ன கோஷேவுக்கு மரண தண்டனையும், ரூ.75,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
