ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. ஆனால் தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய் படங்கள்தான் அட்லிக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. பிகில் படத்தை பார்த்த பிறகுதான் ஷாருக்கான், இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பை தந்ததாக கூறப்படுகிறது. இப்போது ஜவான் படம் 1150 கோடி ரூபாய் வசூலில் சாதனை புரிந்ததால், தொடர்ந்து இந்தி படங்களை இயக்க அட்லிக்கு வாய்ப்புகள் வருகிறது. இப்போது ஷாருக்கான் படத்தையே அடுத்து இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு உருவாகி உள்ளது.

சமீபத்தில் அட்லி அளித்த ஒரு பேட்டியில் விஜய், ஷாருக்கான் இணைந்து நடித்தால் அந்த படம் ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார். மேலும் விஜய் படத்தை தான் அடுத்து இயக்குவார். அல்லது ஷாருக்கான் உடன் மீண்டும் படம் பண்ண வாய்ப்பு அமைந்தால், நிச்சயம் விஜய்தான் அதில் இணைந்து நடிப்பார் எனவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது ஷாருக்கான் உடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை அட்லி இயக்குவது உறுதியாகி விட்டது. விஜயை அட்லி இயக்க மறுத்தாரா, அல்லது அந்த கதைக்கான கேரக்டரில் கமல்தான் நடிக்க வேண்டும் என ஷாருக்கான் விரும்பினாரா என தெரியவில்லை. ஏனெனில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்த வகையில், கமலின் நீண்ட கால நண்பர்தான்.

ஒருவேளை விஜய் 68, விஜய் 69 படங்கள் ஏற்கனவே கமிட் ஆகி இருப்பதாலும், 2026 சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள தயாராகி வருவதாலும் இதில் விஜய்க்கு பதில், கமல்ஹாசனை அட்லி தேர்வு செய்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஜவான் 1150 கோடி ரூபாய் வசூலித்தது என்பதால் கமலே, அட்லி படத்தில் விரும்பி நடிக்கலாம் என்ற தகவலும் உள்ளது. ஆனால், விஜய் நடிக்காமல் ஷாருக்கான் படத்தில் நடிப்பது விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும், அட்லி மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
