பீகாரின் பரவுனி ரயில் சந்திப்பில், ரயில்வே காவல் துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், குளிர்சாதனப் பெட்டிகளில்தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த மாநிலங்களுக்கு இடையேயான ‘சான்சி கொள்ளை கும்பலைச்’ சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த ராம் தியா, ராஜேஷ் மற்றும் அசோக் குமார் ஆகிய இந்த மூன்று திருடர்களிடமிருந்து கூர்மையான கத்திகள், பிளேடுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் தப்பியோடிவிட்ட நிலையில், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கும்பல் பீகார் மட்டுமன்றி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பல மாநிலங்களில் ரயில்களை இலக்காகக் கொண்டு தங்களது கைவரிசையைக் காட்டி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது இந்த கும்பல் ரயில்களில் நுழைவதற்குப் பயன்படுத்திய அதிர்ச்சியூட்டும் உத்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயிலின் ஏசி கோச் உதவியாளர்கள் அல்லது பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு ரூபாய் 800 முதல் 1000 வரை லஞ்சமாகக் கொடுத்து, இவர்கள் எந்தவித பயணச்சீட்டும் இன்றி ஏசி பெட்டிகளுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், இரவில் பயணிகள் தூங்கிக்கொண்டிருக்கும் போது பிளேடுகளால் அவர்களது பைகளை அறுத்து, மொபைல் போன்கள், பணம் மற்றும் நகைகளைத் திருடி வந்துள்ளனர். பிடிபடாமல் இருப்பதற்காகத் திருடிய உடனே தங்களது ஆடைகளை மாற்றிக்கொள்ளும் பழக்கத்தையும் இவர்கள் கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் தங்களது உடமைகளைச் சங்கிலி அல்லது பூட்டுகளால் பாதுகாப்பாக வைக்குமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருந்தால் உடனடியாக 139 என்ற ரயில்வே உதவி எண்களுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
