இனிமேல் உன் படத்துக்குக் கதை எழுத மாட்டேன்… கலைவாணர் என் எஸ் கேவிடம் கோபித்துக் கொண்ட அண்ணா!

By vinoth on மாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே.

   

இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பு, இயக்கம் என பல்துறை வித்தகராக இருந்தார். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசனை வைத்து சில படங்களை தயாரித்துள்ளார். மேடை நாடகங்களில் மட்டும் நடித்திருந்த அவரை நீங்கள் சினிமாவிலும் நடியுங்கள் என இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

   

முதலில் தயங்கிய அவருக்கு ஹாலிவுட்டில் எல்லாம் காமெடி நடிகர்களும் கதாநாயகர்களாக நடித்து வெற்றி கொடுத்துள்ளார்கள். அதனால் துணிந்து நடியுங்கள் என நம்பிக்கை அளித்துள்ளனர். அதன் பிறகே அவர் நடிக்க சம்மதித்துள்ளார்.

 

அப்படி அவர் நடித்தபடம்தான் நல்லதம்பி. அந்த படத்துக்காக அப்போது கதை எழுதுவதில் வித்தகராக இருந்த அறிஞர் அண்ணாவை அமர்த்தியுள்ளனர். கலைவாணரும் பகுத்தறிவு கருத்துகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அண்ணா கதை எழுத ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியே கதையையும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்தக் கதையை படமாக்கும் போது சினிமாவுக்கு என்று சில மாற்றங்களை செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் என் எஸ் கேவின் மேடை நாடக நகைச்சுவை காட்சிகளையும் இணைத்துள்ளனர். இதனால் படம் ரிலீஸான பின்னர் அண்ணா அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டாராம். மேலும் என் எஸ் கே விடம் ‘இனிமேல் உன் படத்துக்குக் கதை எழுத மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டும் சென்றுவிட்டாராம்.