தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், வீட்டில் உள்ள பழைய தங்கத்தை விற்று லாபம் பார்ப்பது சரியான முடிவா என்பது குறித்து ‘கோல்ட் குரு’ சாந்த குமார் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாகவே தங்கம் விலை தற்காலிகமாகச் சரிந்துள்ளது. ஆனால், இந்தப் போர்ச் சூழல் முடிவுக்கு வந்து நிலைமை சீராகும்போது, தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கும் என்றும், அடுத்த ஓராண்டில் தங்கம் விலை குறைந்தது 30% வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
மேலும் பழைய தங்கத்தை விற்பது குறித்து அவர் கூறுகையில், தங்கத்தின் மூலம் கிடைத்த லாபத்தை எடுத்து அதை வேறு ஒரு லாபகரமான தொழிலிலோ அல்லது சொத்திலோ முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் தாராளமாக விற்கலாம் என்றார்.
ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் சும்மா கையில் பணம் வைப்பதற்காகத் தங்கத்தை விற்பது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில், தங்கம் என்பது ஒரு வளர்ந்து வரும் சொத்து. சில மாதங்களிலேயே தங்கம் சவரன் 2 லட்சம் ரூபாயைத் தொடும் அளவுக்கு அதன் மதிப்பு உயரும் என்பதால், அவசரப்பட்டு விற்காமல் நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைப்பதே அதிக லாபத்தைத் தரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
