மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களை ஒருபோதும் சும்மா விடமாட்டேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது இதுதானா என்று அறப்போர் இயக்கம் தற்பொழுது காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அவ்வியக்கம், அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் ‘MDM குட்கா’ நிறுவனத்திடமிருந்து கட்சி நிதி என்ற பெயரில் மாதம் 14 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு நின்றுவிடாமல், விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் வருமான வரித்துறை சுமத்தியுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் வரிசைப்படுத்தி, இந்த அரசியல் நகர்வை அறப்போர் இயக்கம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
