தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 26 அன்று ரத்னம் திரைப்படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இதே தினத்தில் தான் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் ரிலீஸாக இருப்பதாக கூறப்பட்டது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களில் ஒன்று அரண்மனை. இத்திரைப்படத்தின் மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றியை தழுவியதால், அப்படத்தின் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும், ஹீரோயின்களாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். காமெடியனாக யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.
நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படமும், அதே நாளில் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்ததால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது திடீரென அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றபட்டுள்ளது. ஏப்ரல் 26-ந் தேதியில் இருந்து அப்படத்தின் ரிலீஸ் மே 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. எனவே சிங்கம் போல சிங்கிளாக களமிறங்கும் புரட்சித்தளபதியின் ரத்னம் திரைப்படம் களமிறங்கி கல்லா கட்ட உள்ளது.