தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது லண்டன் பயணத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவையும் உடன் அழைத்துச் சென்றுள்ளது குறித்து அப்பாவு தனது சமூக வலைதளப் பதிவில் விமர்சித்துள்ளார். ஆந்திராவில் முன்பு என்.டி.ராமராவ் வெளிநாடு சென்றிருந்த இடைவெளியைப் பயன்படுத்தி, சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆன வரலாற்றுச் சம்பவத்தை அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வரலாற்று நிகழ்வை மேற்கோள் காட்டி, தான் இல்லாத நேரத்தில் இந்தியாவில் இருந்தால் ஆதவ் அர்ஜுனா எங்கே கட்சியைக் கைப்பற்றி முதல்வர் வேட்பாளராகி விடுவாரோ என்ற அச்சத்தில்தான் அவரைத் கூடவே லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளீர்களா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் லண்டன் பயணமும், சபாநாயகர் அப்பாவுவின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த ஒப்பிட்டு விமர்சனமும் தவெக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
