நடிகர் விஜயகாந்த் பெருமையை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஏனெனில் அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்ட பல லட்சம் மக்கள் கூட்டம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை, அவரது சிறந்த குணத்தை. அவரது வள்ளல் மனதை உலகறியச் செய்தது. ஆனால் எங்கெங்கோ இருந்த மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரிந்த கேப்டனின் அருமை பெருமை, அவருடன் பல படங்களில் நடித்த அவருடன் பல நேரங்களில் ஒன்றாக இருந்த, கலைக்குடும்பத்தை சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கு தெரியவில்லையே என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
நடிகர் விஜயகாந்த் மறைவுக்காக நடிகர் சங்கம் சார்பில் எதுவுமே செய்யாத நிலையில், கடைசியாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் டாப் நடிகர்கள் வரிசையில் வந்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. மற்ற யாருமே எட்டிப் பார்க்கவில்லை. மற்றபடி வந்தவர்கள் எல்லாமே சின்ன சின்ன நடிகர்கள்தான். இப்படி அசிங்கப்படுத்த, இப்படி ஒரு இரங்கல் கூட்டத்தை நடிகர் சங்கம் நடத்தாமலேயே இருந்திருக்கலாமே என மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் அஜீத் குமார் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரவில்லை. நினைவேந்தல் கூட்டத்திற்காவது வந்திருக்கலாம். ஐதராபாத்தில் இருந்த தனுஷ் வந்திருக்கலாம். நடிகர் சங்கம் சார்பில், முன்னாள் தலைவர் என்ற முறையில் கேப்டனை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு ஆல்பம் சாங்க் வெளியிட்டு, விஜயகாந்தை கவுரவித்திருக்கலாம். ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு நிகழ்ச்சியாக இதை நடத்தினர். விஜயகாந்துக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்று தெரியாதவர்கள் நடத்திய கூட்டம்தான் இது.
தீராத கறையை இதன்மூலம் ஏற்படுத்திக்கொண்டது நடிகர் சங்கம். இப்படி ஒற்றுமை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது நடிகர் சங்கத்துக்கு தான் அவமானம். இந்த நினைேவந்தல் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது சங்கம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்திருந்தால், அனைவருமே வந்திருப்பர். கலைஞர் 100 விழாவுக்கு அத்தனை ஏற்பாடுகளை செய்தவர்கள், இந்த விஷயத்தில் கோட்டை விட்டதற்கு காரணம் அதில் ஆதாயம் இருந்தது. இதில் ஆதாயம் இல்லை என்பதுதான். நடிகர் சங்கம் குறித்து பேசவே வெட்கமாக உள்ளது, என வெளுத்து வாங்கியிருக்கிறார் அந்தணன்.