“உங்களால் இன்னொரு உயிர் போயிடுச்சு”… “அட்லி வீட்டில் இட்லி முக்கியமா?”… விஜய்யை விளாசிய தள்ளிய பி.டி. செல்வகுமார்…!

By Muthu Mani on பங்குனி 25, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது அவரது முன்னாள் உதவியாளரும், தற்போதைய திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர், விஜய்யைப் பார்க்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார். பால் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர் 19 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து உயிரிழந்தும், விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஆறுதலோ, அஞ்சலியோ செலுத்தப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகளைக் கவனிக்காமல், இயக்குனர் அட்லியின் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள விஜய் தனி விமானத்தில் மும்பை சென்றதை செல்வகுமார் சாடியுள்ளார். “மக்களின் உயிர் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அட்லி வீட்டில் இட்லி சாப்பிடுவதுதான் இவருக்கு முக்கியமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கரூர் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், இதற்கு காரணமான நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

   

தவெக நிர்வாகிகள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்துவதாகவும், மாணவர் சமூகத்தின் நலனில் அக்கறையில்லாமல் இருப்பதாகவும் செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா தமிழக முதலமைச்சருடன் விவாதம் செய்ய அழைப்பு விடுத்ததற்குப் பதிலடியாக, “அவருடன் விவாதம் செய்ய நான் தயார்” என்று செல்வகுமார் பகிரங்க சவால் விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்காக ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கேட்டுக்கொண்டார்.