பாஜகவில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்..? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சித் தகவல்…!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தேசியத் தலைமைக்கும் அவருக்கும் இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளே இந்த இறுதி முடிவுக்குக் காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நான் மிகுந்த மரியாதையுடன் கட்சியில் இருந்து வெளியேற விரும்புகிறேன், எனக்கான புதிய பாதையை நானே வகுத்துக் கொள்ளத் தயாராகிவிட்டேன்” என்று அவர் டெல்லி கூட்டத்தில் மிகத் தெளிவாகக் கூறிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜக தேசியத் தலைமை அண்ணாமலையின் விருப்பத்திற்கு மாறாக அஇஅதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, பாஜக தனித்து நின்று தனது சொந்த பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் நிலைப்பாடாக இருந்தது; கூட்டணி வைப்பது கட்சியின் நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர் கருதினார். எனினும், தேசியத் தலைமையின் அழுத்தத்தால் கூட்டணி நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தேர்தலில் பாஜக வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த அதிருப்தியும், சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கையை அவர் அண்மையில் பகிரங்கமாக விமர்சித்ததும் இந்த விலகல் முடிவை துரிதப்படுத்தியுள்ளன.

   

பாஜகவில் இருந்து வெளியேறிய கையோடு, அண்ணாமலை உடனடியாகத் தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் புதிய கட்சியின் சாத்தியமான பெயர்கள் மற்றும் கொடி வடிவமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், கோயம்புத்தூரில் “எங்கள் தலைவரே, வாருங்கள், எங்களை வழிநடத்துங்கள்” என்ற வாசகங்களுடன் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய முடிவு தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.