தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாயுடு சமூகத்தினரின் ஆதரவைக் கோரிய அவர், மத்தியில் ஆளும் அரசுடன் இணைந்து செயல்படும் மாநிலங்களே வளர்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது மேடையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அருகிலேயே இருந்தனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தாமல் வெறும் இலவசங்களை மட்டும் அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசத் திட்டங்களை முன்னிறுத்தியுள்ள நிலையில், கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவரே அதற்கு எதிராகப் பேசியது அக்கட்சியினரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட திமுகவினர், அதிமுகவின் இலவச அரசியலை அவர்களது கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை எனச் சாடி வருகின்றனர்.
