பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியினர் பலரும் விருப்பம் மனு அளித்துள்ளனர். வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை விருப்பமான அளிக்கலாம் என்று அன்புமணி அறிவித்திருந்தார். இது டிசம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலால் பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இருவரும் சமாதானமாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக அதன் கௌரவ தலைவர் ஜிகே மணி பென்னாகரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ராமதாஸ் பக்கம் இருக்கும் ஜிகே மணி தான் தன்னை அப்பாவிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் அவர் திமுகவின் கைக்கூலி மற்றும் துரோகி என்றும் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் வருகின்ற தேர்தலில் ஜிகே மணியை தோற்கடிக்க முடிவு செய்துள்ள அன்புமணி அவர் எம்எல்ஏவாக இருக்கும் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை அறிந்த பாமக நிர்வாகிகள் குறிப்பாக தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பெண்ணாகரத்தில் அன்புமணி போட்டியிட வேண்டும் என்று விருப்பமான அளித்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியின் மனைவி சௌமியா தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். சட்ட சபை தொகுதி வாரியாக மகளிர் அணி கூட்டங்களில் அவர் பங்கேற்று வருகின்றார். பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்த அவர் தற்போது தன் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கிருஷ்ணசாமியின் சொந்த தொகுதியான செய்யாறில் போட்டியிட ஆலோசித்து வருவதாக தெரிகிறது. தற்போது இது பாமகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
