ராணிப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஒரு “குப்பை ஆட்சி” நடத்துவதாகச் சாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல, அது ஒரு ஜீரோ என்று குறிப்பிட்ட அவர், அதனை குப்பையில் போட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். மேலும், 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வாங்க திமுகவினருக்கு லஞ்சம் வழங்க வேண்டிய நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், பெண்களின் பாதத்தில் விழுந்து கேட்கிறேன், திமுகவை விரட்டியடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்த அன்புமணி, “பாஜகவைப் பார்த்தால் ஸ்டாலினுக்கு அவ்வளவு பயமா?” என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் கூட பாஜகவை நினைத்து பயப்படுவதாகவும், மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெற அவருக்கு துப்பு இல்லை என்றும் மிகக் காரசாரமாகப் பேசினார். ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
