விஜய் டிவியில் காமெடி ஷோக்கள், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமுதவாணன். தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6ல், அதாவது கடந்த 2022ல் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து முதன்முறையாக சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசிய அமுதவாணன் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் நான் போனேன். டாஸ்க்குகளில் விளையாட போறோம். பிக்பாஸ் சொல்வதை செயயப் போறோம். யாராவது நம்மிடம் கோபப்பட்டு பேசினால், பதிலுக்கு நாமும் கோபபட்டு சண்டை போட போறோம் என்ற எண்ணத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன்.

டிவி சேனல் நடத்தும் போட்டிகளில் கலந்துக் கொண்டு ஜெயிக்க வேண்டும் என்றால், 6 மாதம், 8 மாதம் என்று கஷ்டப்பட்ட வேண்டும். உடம்பை உருக்கி, மூளையை உருக்கி அதற்காக கஷ்டப்பட வேண்டும். அப்படியும் போராடி வெற்றி பெற்றால் பரிசாக அதற்கு ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் தான் தருவார்கள். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் நான் இருந்து 12 லட்சம் ரூபாய் பெற்றேன். இது எனக்கு சந்தோஷம்தான். இந்த பெட்டியை மற்றவர்கள் எடுத்த போது திட்டினார்கள். ஆனால் நான் எடுத்த போது எல்லோருமே என்னை பாராட்டினார்கள்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த டாஸ்க்குகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவன் நான்தான். ஒரே ஒருமுறை என்னை வேண்டும் என்றே நாமினேஷன் செய்து, மக்களிடம் ஓட்டு வாங்க வைத்தனர். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் ஓட்டு வாங்கறதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சண்டை போட வேண்டும் என்று தெரிந்திருந்தால், இன்னும் நிறைய சண்டை போட்டு 50 லட்சம் ரூபாயை வாங்கியிருப்பேன். ஆனால் அப்போது அது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அது அந்த சீசனுக்கு மட்டும்தான். இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை போட்டால் ஜெயிக்க முடியாது. பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாள் இருந்தேன். எல்லா போட்டிகளிலும் ஜெயித்தேன். கிராண்ட் பினாலே டிக்கெட்டும் வின் பண்ணினேன். 12 லட்சம் ரூபாய் போதும் என்று பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார் அமுதவாணன்.
