2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி குறித்த நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் முதல்முறையாக ‘பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி’ மற்றும் அமைச்சரவையில் இடங்களை அமித் ஷா கோரியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வரும் தேர்தலில் அதிமுகவிடம் சுமார் 54 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ய அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் இந்த அதிரடியான நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் யோசனையை இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் துணை முதல்வர் பதவி குறித்த விவகாரம் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் பலத்தை விட அதிக இடங்களையும், அதிகாரப் பகிர்வையும் அக்கட்சி கோருவது அதிமுகவின் செல்வாக்கை பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் அதிமுக தலைமை கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
