துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. நட்டி (நடராஜ்), தம்பி ராமையா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. குறிப்பாக, போஸ்டரில் நடிகர் நட்டியின் தோற்றம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை பிரதிபலிப்பது போல இருந்ததால், இது விஜய்க்கு எதிரான உள்நோக்கம் கொண்ட படம் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். தேர்தல் நேரத்தில் மற்ற அரசியல் படங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழலில், உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இப்படம் மட்டும் எப்படி வெளியாகிறது என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தம்பி ராமையா, “தம்பி ஆதவ் அர்ஜுனா உட்பட அனைத்துக் கட்சியினரிடமும் எனக்கு நட்பு இருக்கிறது. வெறும் போஸ்டர்களைக் கண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் தம்பி ராமையா உருக்கமாகப் பேசுகையில், “இது எனது மகனின் வாழ்க்கை என்பதால் எனக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. தவெகவினர் சங்கடப்படும் வகையில் ஒரு நூல் அளவு கூட இந்தப் படத்தில் எதிர்மறையான கருத்துக்கள் இருக்காது. படம் பார்த்த பிறகு, ‘இதையா நாம் தவறாகப் புரிந்து கொண்டோம்’ என நீங்களே என்னைத் தொடர்பு கொண்டு பேசுவீர்கள்,” என்று உறுதியளித்தார். இதன் மூலம் படம் எந்தவொரு தனிப்பட்ட தலைவரையும் அல்லது கட்சியையும் புண்படுத்தும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இயக்குனர் உமாபதியும் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “இந்தக் கதை பல்வேறு காலகட்டங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, அதற்காகவே நட்டிக்கு அந்தத் தோற்றம் கொடுக்கப்பட்டது. சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் என அண்ணா (விஜய்) சொல்லியிருக்கிறார். நான் யாரை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்படுகிறதோ, அவர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராலும் களங்கப்படுத்த முடியாது” எனத் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் வெளியீட்டிற்காகத் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
