தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல்களும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மத்திய ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஏற்பாட்டில், மேல் அருங்குணம் ஊராட்சியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நீலகண்டன், கங்காதரன், அமுல்ராஜ், விஜயகுமார் மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து திமுக தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.
