தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.
இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.
இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித், ஆரம்பத்தில் பல ரொமாண்டிக் எமோஷனல் படங்களில் நடித்துள்ளார். தீனா படத்துக்குப் பிறகு முழு ஆக்ஷன் ஹீரோவானார். அதன் பிறகு அவர் மாஸ் நாளுக்கு நாள் அதிகமாகியது. ஆனாலும் அஜித் மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவேயில்லை.
அதற்கு அஜித்தின் விட்டேத்தியான குணாம்சம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அஜித், விக்ரம் சூர்யா போல ஒரு படத்துக்காக தன்னைக் கடுமையாக வருத்திக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் நடிக்கக் கூடிய நடிகர் இல்லை. மிகவும் எளிதாக அதிகம் மெனக்கெடாத கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில்தான் நடிப்பார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஷங்கரே அஜித்துக்கு போன் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டாராம். ஆனால் அஜித்தோ “வேணாம் சார். உங்கள் படங்களின் கதாபாத்திரத்துக்கு என்று நீங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் அதுபோல நான் நடிப்பதில்லை. நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்” எனக் கூறிவிட்டதாக சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அது ஒரு நல்ல முடிவுதான் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால் நடிகர்களில் ஈகோ அதிகமாகப் பார்ப்பவர் அஜித், அதே போல ஷங்கரும் ஈகோ உள்ள இயக்குனர், அதனால் அவர்கள் ஒரு படத்தில் இணைந்தால் கண்டிப்பாக படத்தில் பல பிரச்சனைகள் வந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
