அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அண்மைக்காலமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், கட்சியின் செயற்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் மீது எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கி சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இத்தலைவர்கள், தற்போதைய அரசியல் சூழலில் செயற்குழுவைக் கூட்டக் கோரும் முடிவை அவர் கைவிட வேண்டும் என்றும், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
