தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஈபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழ்வு. நல்ல முடிவாக இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கவில்லை. அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக கடந்த ஏழாம் தேதி கூறியிருந்த நிலையில் இந்த பதிலை செங்கோட்டையன் கூறினார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு தற்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல இயலாது என்று பதில் அளித்துள்ளார். தற்போது மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து செங்கோட்டையன் பேசியுள்ளது அதிமுகவில் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.
