தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சிகளில் உள்ள முக்கிய முகங்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. இந்நிலையில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகிய ஐம்பதுக்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். கொங்கு மண்டல அரசியலில் இந்த இணைப்பு ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
