தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 65 தொகுதிகள் கேட்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக 60 தொகுதிகளை கேட்பதாக வெளியாகி வரும் தகவல் குறித்த கேள்விக்கு, தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்கும். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சியும் சீட் அதிகமாக தான் கேட்பார்கள்.
அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கப்படும் என்று பதிலளித்தார். மீண்டும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, No Doubt..25 வருடம் வெற்றியை கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். களத்தில் ஒரு மாவீரனுக்கு, ஒரு விளையாட்டு வீரனுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. எந்த ஊரும் கிடையாது, ஒரே ஊர் தான் ராயபுரம். ராயபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்க உள்ளேன். ராயபுரம் தொகுதியை விட்டு விலகி செல்ல மாட்டேன். நான் எப்போதும் அங்கு தான் போட்டியிடுவேன் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
