2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ள அ.தி.மு.க-வில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்த அதிருப்தி அணியினர் சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம், கட்சியை இரண்டாக உடைக்கும் அளவுக்குப் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த உட்கட்சிப் பூசலின் அதிரடி நடவடிக்கையாக, தனக்கு எதிராகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகளைப் பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி வருகிறார். ஏற்கனவே வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேரை நீக்கியிருந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சி. கிருஷ்ண முரளி ஆகியோரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அடுத்தடுத்த நீக்க நடவடிக்கைகளால் அ.தி.மு.க-வுக்குள் அதிகாரப் போட்டியும், மாவட்ட அலுவலகங்கள் மூடப்படும் அளவிற்கான மோதல்களும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
