செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், அதன் எதிர்கால ஆபத்துகள் குறித்த அச்சத்தையும் விதைத்துள்ளது. முன்னணி ஏஐ நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் ஊழியர் ஜாகப், “அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்தையே அழிக்கும் அபாயம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது” என்று எச்சரித்திருந்தார். ஏஐ மாடல்கள் தானாகவே சிந்தித்து மேம்படும் நிலையை எட்டும்போது, அவை மனித இனத்திற்குப் பேராபத்தாக மாறக்கூடும் என்றும், நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக எல்லை மீறிய ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) டாரியோ அமோடே விளக்கம் அளித்துள்ளார். ஜாகப் எழுப்பியுள்ள கவலைகளில் நியாயம் உண்டு என்பதை ஒப்புக்கொண்ட அவர், “நாம் சரியான பாதுகாப்பு வழிகளைத் தேர்ந்தெடுத்தால் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏஐ துறையில் சில அசம்பாவிதங்கள் நடக்கச் சிறிய அளவில் வாய்ப்புள்ளது என்றாலும், அது மனித குலத்தையே அழிக்கும் அளவிற்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்காது” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை நியாயப்படுத்திய டாரியோ அமோடே, ஆந்த்ரோபிக் நிறுவனம் எப்போதும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். ஜாகப் குறிப்பிட்ட கவலைகள் தங்களது நிறுவனத்தை மட்டும் சார்ந்ததல்ல என்றும், ஒட்டுமொத்த ஏஐ தொழில்துறையின் அதிவேக வளர்ச்சியைக் குறித்தது என்றும் தெளிவுபடுத்தினார். ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பான பாதையில் கொண்டு செல்ல நிறுவனங்களும் உலக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அவர், ஏஐ வளர்ச்சியை உலக நாடுகள் அளவுக்கு அதிகமாக மெதுவாக்கினால், இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு தவறான நபர்கள் கைக்குச் சென்றுவிடும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். எனவே, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதே மனித குலத்திற்கு ஆபத்தில்லாத சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையோடு தனது விளக்கத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.
