நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு திருநெல்வேலியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்ட விளம்பர பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள உணவகம் ஒன்றின் விளம்பரத்தில் “அரபிக் ஸ்டைல் 65 பிரியாணி – ரூ.99” என்ற வாசகத்துடன், விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ருந்தது. இந்த விளம்பரம் இந்துக்களின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் கடுமையாகப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக 42 வயதான செல்வராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று அந்தச் சர்ச்சை பேனரை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக 30 வயதான கடை உரிமையாளர் ஜெயந்த் என்பவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த பேனரை வடிவமைக்க உத்தரவிட்டது யார், எப்போது வைக்கப்பட்டது என்பது குறித்து நெல்லை போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
