“எங்களை தொட்டுருக்கவே கூடாது… எங்க ஆயுதத்தை எடுக்க வைக்காதீங்க”…. தவெக-வை கத்துக்குட்டி என வறுத்தெடுத்த அதிமுக… பைனல் வார்னிங்…!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அண்மைக் காலமாக தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளின் காரணமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் தவெகவில் இணைந்து வருவது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆதிலட்சுமி என்பவர் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த கவுன்சிலர் பதவியை ஆதிலட்சுமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரது பதவியை நீக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராம ராமநாதன் வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாய்வு மற்றும் தவெக ஆதரவாளர்கள், கும்பகோணத்தில் உள்ள ராமநாதனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

   

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் தவெகவை மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்திப் பெற்றுத் தந்த பதவியை வைத்துக்கொண்டு, சுயநலத்திற்காக மற்றொரு கட்சிக்குச் செல்வது ஒட்டுண்ணித்தனம் என்று விமர்சித்துள்ளது. மேலும், கழக உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட நியாயமான கேள்விக்கு ஜனநாயக ரீதியாகப் பதில் சொல்லத் துப்பற்றவர்கள், ஆட்களை ஏவி வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்துவதுதான் தவெக காட்டும் மாற்று அரசியலா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

   

இறுதியாக, தவெகவை ‘கத்துக்குட்டி ஆளுங்கட்சி’ என்று வர்ணித்துள்ள அதிமுக, வீணாகத் தங்கள் கட்சியின் தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ சீண்டிப் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. “அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கும் எங்களை ஆயுதம் ஏந்த வைக்க வேண்டாம்; மீறினால் கடுமையான அரசியல் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ள அதிமுக தலைமை, ராமநாதனின் வீட்டை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிமுகவினரால் வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.