அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் வட தமிழகத்தில் செல்வாக்குமிக்க சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கையில் எடுத்துள்ள அதிரடிப் படலம், கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, கட்சியில் நிலவி வரும் பிளவு, மாவட்டச் செயலாளர் நியமனங்கள் போன்ற விவகாரங்களால் அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்கள், இப்போது எடப்பாடியின் தலைமைத்துவத்திற்கு எதிராகவே காய் நகர்த்தத் தொடங்கியிருப்பது இபிஎஸ் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க முன்வந்தபோது, அதை அவர் அதிரடியாக மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் பேசும் வேலுமணி, “என்னை நம்பி வந்தவர்களுக்குப் பொறுப்பு தராமல், எனக்கு மட்டும் உயர்பதவி கொடுத்தால் அதை எப்படி ஏற்பது? பல ஆண்டுகளாக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு நான் பதவி வாங்க விரும்பவில்லை” என்று எடப்பாடிக்கு எதிராகப் பகிரங்கமாகக் குரல் எழுப்பியுள்ளார். இவருக்கு ஆதரவாகப் பல எம்.எல்.ஏ-க்களும் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
வேலுமணியின் இந்த அதிருப்திப் போக்கிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் கைகோர்த்துள்ளனர். “எங்களுக்குப் பதவிகள் தேவையில்லை; சாதாரண தொண்டர்களாகவே தொடர்கிறோம்” என்று இவர்களும் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பி இபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாக மாற்றங்கள் இவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்ததே இந்த அதிகாரப் போட்டிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கொங்கு மற்றும் வட மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு எதிராக ஒரே அணியாகத் திரண்டு வருவது “அதிமுக 2.0” அல்லது “புதிய தலைமை”க்கான சமிக்ஞையோ என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
அதிமுகவின் இந்தத் தொடர் உள்விவகாரங்கள் அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய சூழலில், எடப்பாடி பழனிசாமி இந்த அதிருப்தியை எப்படி கையாளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகளுடன் அவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாரா, அல்லது அதிருப்தியாளர்களை ஓரம் கட்டி புதிய மாற்றங்களை மேற்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
