தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. முன்னதாகப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்காது என்றும், சிலர் பதவி ஆசைக்காகக் கட்சித் தாவலில் ஈடுபடுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், சபாநாயகரின் அனுமதியோடு பேசத் தொடங்கிய எஸ்.பி. வேலுமணி, எடப்பாடியின் கருத்துக்கு மாறாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.
தன்னுடைய உரையில் அதிமுகவின் ஒரு பிரிவினரை வழிநடத்திப் பேசிய எஸ்.பி. வேலுமணி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விஜய்க்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது” என அறிவித்தார். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை, தவெக அரசு 200 யூனிட்டாக உயர்த்தியிருப்பதைப் பாராட்டிய அவர், அம்மாவின் மக்கள் நலத் திட்டங்களை இந்த அரசு சிறப்பாக முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். எடப்பாடி அணியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து இந்த ஆதரவை வழங்குவதாக அவர் உறுதிபடக் கூறினார்.
இந்த நிகழ்வு அதிமுகவின் உட்கட்சிப் பூசலைச் சட்டமன்றத்திலேயே வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. நேற்றைய தினமே சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் வேலுமணி அதனை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். “நாங்கள் பதவிக்காக ஆசைப்படுபவர்கள் கிடையாது” என்று எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த வேலுமணி, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்குத் தனது ஆதரவை அளித்து அதிமுகவின் மற்றொரு தரப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இதனால் தமிழக அரசியலில் தவெக-அதிமுக கூட்டணி தொடர்பான புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.
