ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

By Nanthini on ஆனி 4, 2026

Spread the love

:

அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான அரசியல் மோதல் வெடித்தது. இதன் உச்சகட்டமாக, 2022 ஜூன் 23 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் இபிஎஸ் தரப்பால் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடையாணை கோரியும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தொடரப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன.

   

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதிமுகவின் பெயர், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும், கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் இபிஎஸ் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இருதரப்பும் மாறி மாறி சட்டப்போராட்டம் நடத்தி வந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை யார் என்ற சர்ச்சை நீதிமன்ற படிக்கட்டுகளில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வந்தது.

   

தற்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இருதரப்பினரும் தங்களது வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்து நீதிமன்றப் பதிவுத்துறைக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு கடிதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, வழக்குகளைத் திரும்பப் பெற அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கினார். இதன் மூலம், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த அனைத்து சிவில் வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகினர். இவ்வாறு அவர்கள் மாற்றுக்கட்சியில் முறைப்படி இணைந்துவிட்டதால், அதிமுகவிற்கு உரிமை கோரி தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் தொடர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. முன்னதாக, 2021-ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கிய பிறகு தனது வழக்கை வாபஸ் பெற்றதைப் போல, தற்போது ஓபிஎஸ் தரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றதன் மூலம் அதிமுகவின் முழுமையான கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமி வசம் செல்வது சட்டப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.