BREAKING: அதிமுகவுக்கு விழுந்த பலத்த அடி… முக்கிய நாடாளுமன்ற குழு தலைவர் திடீர் ராஜினாமா.. பின்னணியில் இருக்கும் ‘சாதிய’ அரசியல் பின்னடைவு…?

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகள் போன்றவற்றை மையமாக வைத்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து இருமுறை (2009, 2014) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2017-ல் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், கட்சியின் மருத்துவ அணிச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது விலகல் கடிதத்தில் அதிமுகவின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக டாக்டர் வேணுகோபால் விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லத் தவறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி மீது அவர் நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தலைவர்களை இழந்து தவிக்கும் இன்றைய அதிமுகவின் நிலை, பெற்றோரை இழந்து வாடும் அனாதைக் குழந்தை போல வழி தெரியாமல் தத்தளிப்பதாகத் தொண்டர்களின் வேதனையைத் தனது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

   

கட்சியின் தொடர் வீழ்ச்சிக்கான சமூகக் காரணிகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத பலமாக இருந்த பட்டியல் சமூக மக்களின் ஆதரவுத் தளம், தற்போதைய தலைமையின் “அனைவருக்குமான தோற்றம்” குறைந்ததால் படிப்படியாகச் சரிந்துவிட்டது என்று கூறியுள்ளார். அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற இயக்கம், தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி மட்டுமே பயணிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதால், மற்ற சமூகத்தினரிடையே இடைவெளி உருவாகி, அதுவே தேர்தல் தோல்விகளுக்கு முதன்மைக் காரணமாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

இறுதியாக, தமிழ் மக்களின் நலனையும் தொண்டர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பிரிந்து கிடக்கும் அனைவரும் தங்கள் முரண்பாடுகளை விட்டுக்கொடுத்து ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். “ஜெயலலிதாவின் நூறாண்டு காலக் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அம்மா ஆட்சியை அமைக்கப் பாடுபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட வேணுகோபால், தற்போதைய சூழலில் நிலவும் மனவருத்தத்தோடு இன்று முதல் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.