தூது போன தூதுவர்கள்… சீட்டுக்கட்டாய் சரிந்த அதிமுக.. கடைசி செங்கல்லையும் உருவிய சண்முகம்… கலக்கத்தில் இ.பி.எஸ்…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில், தோல்விக்குத் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் உச்சகட்டமாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. இது அதிமுகவின் அதிகார மையத்தை இரண்டாக உடைத்து, கட்சியை மீண்டும் ஒரு பிளவை நோக்கித் தள்ளியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் தலைமையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் தனியாக ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 38 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதரவு கடிதங்கள் தயாராகி வருவதால், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நேரடி நெருக்கடி உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 60 சதவீத நிர்வாகிகள் அதிருப்தி அணியின் பக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

   

நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன் மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களைத் தூது அனுப்பி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். “சண்முகம் சொல்வதைக் கேட்கத் தயார்” என எடப்பாடி இறங்கி வந்தாலும், அதிருப்தி அணியினர் சமரசத்திற்கு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நிலவும் விவாதங்கள், எடப்பாடி தரப்பிற்கும் சண்முகம் தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

   

ஏற்கனவே ஓபிஎஸ் பிரிவு காரணமாகப் பலவீனமடைந்த அதிமுக, தற்போது மீண்டும் பிளவுபடும் விளிம்பில் நிற்பது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்வி, வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி விவகாரங்களில் தலைமையின் செயல்பாடே தோல்விக்குக் காரணம் என அதிருப்தி குழுவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இன்று நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே, அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.