90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை வாணி விஸ்வநாத். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவருடைய தந்தை விஸ்வநாதன் ஒரு ஜோதிடர். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்த வாணி விஸ்வநாத் 13 வயதிலேயே சினிமாவில் நடிப்பார் அரசியலில் நுழைவார் என்று அவருடைய தந்தை கணித்தார். அந்த கணிப்பு பொய்யாக போகவில்லை. தன்னுடைய 15ஆவது வயதில் 1989 ஆம் ஆண்டு வாணி விஸ்வநாத் மண்ணுக்குள் வைரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சிவாஜி, சுஜாதா, ராஜேஷ் மற்றும் முரளி ஆகியோருடன் வாணி விஸ்வநாத் நடித்திருந்தார். பிறகு 1988 ஆம் ஆண்டு முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்தின் நல்லவன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அந்தத் திரைப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் தம்பியாக நடித்த விஜயகாந்த் வாணி விஸ்வநாத் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பூந்தோட்ட காவல்காரன், தாய் மேல் ஆணை மற்றும் இது எங்கள் நீதி என தமிழில் பல திரைப்படங்களில் நடித்தாலும் அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ் பெற ஆரம்பித்தார். 1995ஆம் ஆண்டு வெளியான மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங் படத்தில் இவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். தற்காப்பு கலை கற்றவர் என்பதால் இவருடைய படங்களில் கட்டாயம் சண்டை காட்சிகளும் இருக்கும்.
மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கிலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் களம் இறங்கினார். இதனிடையே வில்லனாக பிரபலமடைந்த மலையாள நடிகர் பாபுராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் வாணி விஸ்வநாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார். அதில், நான் ஆக்சன் ஹீரோயின் ஆனதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் சார் தான். அவர்தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.
நான் சிவாஜி சார் படம் மண்ணுக்குள் வைரம் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் என்னை ஹீரோயினியாக செலக்ட் பண்ணியது கேப்டன் விஜயகாந்த் தான். பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்திற்கு பிறகு நல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தேன். பாராமல் பார்த்த நெஞ்சம், என்னுயிரே வா பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. இப்போதும் இந்தப் பாடல்களை வைத்து தான் தமிழ் ரசிகர்கள் என்னை நலம் விசாரிக்கின்றன. இளையராஜா சாருக்கு ஸ்பெஷலா நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை வாணி விஸ்வநாத் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.