தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய் மீதே குவிந்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய்க்கு, எக்ஸிட் போல் முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘தமிழக வெற்றி கழகம்’ தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் சூழலில், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் எதிர்வினைகளும் சமூக வலைதளங்களில் உற்று நோக்கப்படுகின்றன.
இந்த பரபரப்பான சூழலில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் காரில் பயணிக்கும் புகைப்படத்தில் ‘திருப்பதி’ என்ற பெயர் பலகை இடம்பெற்றுள்ளதை அடுத்து, அவர் ஏழுமலையான் தரிசனத்திற்காக ஆந்திரா சென்றுள்ளது உறுதியாகியுள்ளது. விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு அனைவரும் அறிந்ததே என்பதால், விஜய்யின் அரசியல் வெற்றிக்காக வேண்டித்தான் அவர் திருப்பதிக்குச் செல்கிறாரா என்ற கேள்வி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இருப்பினும், இந்த பயணத்திற்கு பின்னால் மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே வேளையில், நடிகை திரிஷாவின் பிறந்தநாளும் இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளில் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நேர்த்திக்கடனைச் செலுத்தவே திரிஷா இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில், திரிஷாவின் இந்த பயணம் விஜய்யின் அரசியல் வெற்றிக்கான வேண்டுதலா அல்லது அவரது தனிப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டமா என்பது குறித்து அவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வரவில்லை. எது எப்படியாக இருப்பினும், விஜய்யின் தேர்தல் முடிவுகளும் திரிஷாவின் பிறந்தநாளும் ஒரே நாளில் வந்திருப்பது சமூக வலைதளங்களில் ‘லியோ’ ஜோடியின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாகத் தெரியவரும் போது, திரிஷாவின் வேண்டுதல் யாருக்காக என்பது குறித்த தெளிவு கிடைக்கலாம்.
