முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ஆபாசமாக சித்தரித்து அந்த வீடியோ பரப்பப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா வேறு ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மற்றொருவரது உடலுடன் ஒருவரின் முக அமைப்பை மட்டும் மாற்றி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொந்தளித்தனர். பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாபச்சன் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலியான வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது போன்ற விவகாரம் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என facebook, instagram, twitter, youtube போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அறிவுரை வழங்கியிருக்கிறது. ஒருவரை போல இன்னொருவர் படத்தை மாற்றி வெளியிடக் கூடாது என்பது சட்ட விதி. அதனை மீறி பயனாளர்கள் யாரும் ஈடுபடாமல் இருப்பதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதுபோல ஒருவரது படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக புகார் வந்தால் 24 மணி நேரத்திற்குள் அந்த வீடியோ நீக்கப்பட வேண்டும். மார்பிங் செய்து மோசடியில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் ராஷ்மிகாவின் வீடியோவை மாற்றம் செய்து வெளியிட்டது யார் என மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.