‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான சம்பவத்தைப் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தன்னை ஒருதலையாகக் காதலித்த ஒரு நபர், தனது காதலை ஏற்கவில்லை என்ற ஆத்திரத்தில் ரேச்சலின் வீட்டிற்குள்ளேயே புகுந்துள்ளார். அந்த நபர் ரேச்சலை மட்டுமல்லாமல், அவரது அம்மாவையும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளதாக நடிகை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ரேச்சலுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த இக்கட்டான சூழலில், பல நல்ல உள்ளங்கள் முன்வந்து அவருக்கு ரத்த தானம் செய்துள்ளனர். “அன்று ரத்தம் கொடுத்து உதவிய அந்த மனிதர்களால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்” என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இவரது இந்தப் பேட்டி, ஒருதலைக் காதலால் ஏற்படும் வன்முறைகள் குறித்த அதிர்ச்சியை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
