தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயதான புலவர் கணேசன், சின்னத்திரை மற்றும் திரைப்பட துணை நடிகை தீபாவின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலரால் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கப்பட்டார். இந்தத் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கணேசன், தற்போது தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் துணை நடிகையாக வலம் வரும் தீபாவின் தந்தைக்கு நேர்ந்த இந்த கதி, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
