யார பாத்து என்ன வார்த்தை சொன்ன.. ஷூட்டில் ஸ்பாட்டில் SS.சந்திரனை அடித்த கவுண்டமணி..

By Sumathi

Updated on:

நடிகர் கவுண்டமணி எப்போதும் யாரையும் மிக எளிதாக கிண்டலடித்து விடுவார். சில வேளைகளில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் போன்ற பெரிய நடிகர்களை கூட அவர் விட்டு வைத்ததில்லை. பாபா, மன்னன் போன்ற படங்களில் ரஜினியையே ஓவராக கலாய்த்திருப்பார். படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் அவரிடம் நிறைய குசும்பு உண்டு என்பதால், மேடை பேச்சுகளிலும் அது தாராளமாக வெளிப்படும். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மற்றவர்களை கிண்டலடித்து விடுவார். ஷூட்டிங் இவர் பேச வேண்டிய டயலாக்குடன் சில வார்த்தைகளை சொந்த கமெண்ட் ஆக பேசுவதும் சில நேரங்களில் காமெடியாக இருப்பதால், டைரக்டர்கள் அதையும் படத்தில் வைத்துவிடுவர்.

   

பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் பெரிய மருது. விஜயகாந்த், ரஞ்சிதா நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, எஸ்எஸ் சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடந்த போது அங்கு நடந்த சில விஷயங்களை, அந்த படத்தில் காமெடிக்கு வசனகர்த்தாவாக பணிசெய்த ராஜகோபால் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, பொதுவாக கவுண்டமணி யாரையும் கலாய்த்து விடுவார். அது ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடக்கும். அதுபோல் எஸ் எஸ் சந்திரனும் சில நேரங்களில் காட்சிக்கு ஏற்ப பேசி விடுவதும் உண்டு. அப்படி பேசியதால் சண்டை ஏற்பட்டது மறக்க முடியாத ஒரு அனுபவமாகி விட்டது.

ஒரு காட்சியில், பிச்சைக்காரன் வேடத்தில் கவுண்டமணி வீட்டுக்கு முன் வந்து எஸ்எஸ் சந்திரன் பிச்சை எடுப்பார். அப்போது சட்டையின்றி கவுண்டமணி அமர்ந்திருப்பார். அப்போது எஸ்எஸ் சந்திரன் பிச்சை கேட்பார். அம்மா தாயே மகாலட்சுமி பிச்சை போடுங்க என பிச்சை கேட்க, அப்போது பிச்சைக்காரனுக்கு கூட உன் பேரு தெரியுது, மகாலட்சுமின்னு பேர் சொல்லி பிச்சை கேக்கறான் பாருன்னு கவுண்டமணி பேசணும். ஆனா, யாரு அது வீட்டுக்கு முன்னாடி கரடி மாதிரி உட்கார்ந்திருக்கறதுன்னு மாத்தி எஸ் எஸ் சந்திரன் பேசிட்டார். ஏன்னா, கவுண்டமணி உடம்புல அவ்வளவு முடி இருக்கும்.

இது பெரிய பிரச்னை ஆயிடுச்சு.ஷூட்டிங் பார்த்திட்டு இருந்த மக்கள் எல்லாம் சிரிச்சதால கவுண்டமணி டென்சன் ஆயிட்டாரு. படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னவரை சமாதானப்படுத்தி நடிக்க வெச்சோம். அப்புறம் ஒரு சீன்ல, மாமனார் எஸ் எஸ் சந்திரன், கவுண்டமணி காதலிக்கிற பூக்காரியை கல்யாணம் பண்ணீட்டு வந்துடுவாரு. அப்ப டயலாக் பேசி சண்டை போட்டதுல நிஜமாகவே தள்ளி விட்டு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க. அதுல நிஜக்கத்தி வெச்சு பேசற சீன்ல, ரெண்டு பேரையும் தனித்தனியா குளோசப் வெச்சு எடுத்து சமாளிச்சோம் என்று கூறியிருக்கிறார் ராஜகோபால்.

author avatar
Sumathi