சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த 6ம் தேதி மாலை, கலைஞர் 100 விழா நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி தொழிலாளர் அமைப்பு உள்ள 5 அமைப்புகள் சார்பில் இந்த விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாராட்டும் விதமாக, இந்த விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரம் பேர் கூட கலந்துக்கொள்ளவில்லை என்பதும், ரஜினி கமல் போன்றவர்கள் மேடையில் பேசிய போது, பார்வையாளர் பகுதியில் இருந்த காலி சேர்களை பார்த்து பேசும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மிக மோசமாக நடந்த, திட்டமிடப்படாத ஒருவிழா என்ற கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் ரங்கநாதன், இந்த விழாவை பொருத்த வரை அங்கு வந்தவர்களை வா என கேட்கவும் ஆளில்லை. திரும்பி போனவர்களை ஏன் போகிறீர்கள் என கேட்கவும் ஆளில்லை. விழாவுக்கு அழைத்தவர்களை மேடை ஏறி பேசவும் அனுமதிக்கவில்லை. ரஜினி, கமல் மேடையில் பேசும்போது, பார்வையாளர்கள் வரிசையில் 500 பேர் கூட இல்லை. இப்படி காலி சேர்களை பார்த்து ரஜினி மேடையில் பேசியது இதுதான் முதன்முறையாக இருக்கும். கூட்டமே இல்லாததால்தான், மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. கருணாநிதியின் மகனாக வந்திருக்கிறேன். என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்களை அழைக்கவில்லை. கலைஞர் டிவி ஒளிபரப்புவதாக கூறி, பத்திரிகையாளர்களை புறக்கணித்தனர். மக்களிடம் விழா குறித்த செய்திகள் சரியாக சென்று சேராததால், மக்களும் இந்த விழாவை புறக்கணித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. இந்த விழாவுக்கு வந்த நயன்தாராவை, பேட்டரி காரில் மற்றவர்களுடன் சேர்த்து அழைத்து வந்தனர். ஜிம்பாய்ஸ் உடன் அவர் வர மிகவும் சங்கடப்பட்டார்.
சத்யராஜ், டி ராஜேந்தர் போன்றவர்களுக்கு 4, 5வது வரிசைகளில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனால் அதிருப்தியடைந்த அவர்களை, மேடையில் பேசவும் அனுமதிக்கவில்லை. அதனால் நயன்தாரா, சத்யராஜ், டி. ராஜேந்தர் போன்றவர்கள் பாதியிலேயே வெளியேறிச் சென்றுவிட்டனர், என்ற அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.